புதன், 19 நவம்பர், 2014

நீ / நான்

என் உறக்கம் கலையாமல் 
எனை எழுப்பும் 
சின்னக் குழந்தையின் 
செல்லத் தீண்டல் நீ !

போர்த்திய போர்வைக்குள் 
புகுந்துகொண்டு 
அணைப்பை அற்புதமாய் 
உணரவைக்கும் 
புலர்ப் பொழுதின் புதுக்காற்று நீ !

விழிகளின் திறப்புவிழாவில் 
விருந்தினராய் நுழைந்துவிட்ட
விடியலின் வெளிச்ச சாரல் நீ !

வெண்ணிலா முகம் பார்க்க 
விடியல் வரை விழித்திருந்து 
நுனிவிரல் பட்டவுடன்
சிலிர்த்து விழும் சிறுதுளி  நீ !

கோடிகள் சேர்க்காமல் 
கோப்பைக்குள் குடிவந்து 
கொஞ்சலாய் ததும்பி நிற்கும் 
குறும்புகள் நீ! 

அதரம் நனைக்க அமுதம் சுரக்கும் 
அருவியும் நீ !

எல்லோருக்கும் ஏதோவாகும் நீ 
எனக்கு மட்டும் யாதுமாகிறாய் நீ !

கவிதாயினி  நிலாபாரதி