வெள்ளி, 22 ஏப்ரல், 2016

வைகறைக்கு ஏன் அஸ்தமனம்

இனி எங்கு
வைத்திருக்கபோகிறாய்
உன் புன்னகையை? 

இந்த வீதியில்  உனை பார்க்காமல் போன பொழுதுகள்
இப்படி நிரந்தரமாகக்கூடும்
என நினைக்கவேயில்லை.

வைகறை வைகறை
எப்போதுமே போனாய் அஸ்தமனத்திற்குள் ?

இன்னும் அந்த கணங்கள் கனமாய்அமர்ந்திருக்கிறது மனதிலும் விழியிலும்!

ஜெய்குட்டிக்காகவேனும் இன்னும் நீ இருந்திருக்கக்கூடாதா?

வெட்டப்பட்ட மரத்தை கடப்பதற்கு மனபிறழ்வாயிருக்கவேண்டும் என்றாயே வீதியில்!

உன் மரணத்தை கடப்பதற்கு மனப்பிறழ்வாய் தானிருக்கவேண்டும்  இந்த இலகுமனமும்!

வியாழன், 24 மார்ச், 2016

ஏக்கங்களின் விதை

இமைகள் நீங்காத
உறக்கம் வந்தால் போதுமானது
இரவை கடப்பதற்கு!

ஈரத்துணியில் நீர் உறிஞ்சும் காற்றினைப்போல
உன் நினைவென் உறக்கத்தை
உறிஞ்சிக்குடிக்கிறது சலனமின்றி!

ஓடும் சக்கரங்களெனினும்
ஒட்டி முத்தமிடும் தண்டவாளமாய்
ஒற்றி ஒற்றியெடுக்கிறேன்
உன் கனவு உதடுகளில்

எப்போதேனும்
வந்தமர மாட்டாயா
என் காதோரம்
கிசுகிசுத்து குழல்கோதும்
காற்றென?

காத்திருக்கிறேன்
பாலைதான் பயணமென
பலபேர் பகன்றாலும்
பனித்துளியேந்தும் கள்ளிச்செடியின்
முள்குவிந்த இலையென!

படம்  உதவி    உமையாழ் பெரிந்தேவி

செவ்வாய், 15 மார்ச், 2016

கண்கொள்ளா காட்சி

அவர்கள் அளவுக்கு
அரிவாளோ,  கத்தியோதான் கிடைக்கவில்லை
கற்கள் கூடவா கிடைக்கவில்லை?

பாலைநிலத்திலா
நின்று வேடிக்கைப்பார்த்தீர்கள்? 

இளஞ்செடியொன்றின் வேரது
வெட்டரிவாள் கொண்டு வெட்டப்படுவதை?

போராட்டம்  போலீஸ்  தடியடி இவைகளில்
கல்மழையே குவித்துவிடும் நீங்கள்தானா
நேற்று கையறுநிலையில்?

இலவசம்,  சலுகை தள்ளுபடி இவற்றில் தள்ளுமுள்ளு,
தில்லுமுள்ளு செய்தேனும்   ஒருநொடியில்      உள்நுழைந்துவிடும்
நீங்கள் தானா
துளிர்
உயிர் வெளியேற நின்றீர்கள்
மனிதமற்ற பிணமாய்?

வரட்டும் தேர்தல்
வாக்களியுங்கள்
உங்கள் சாதிக்காரருக்கு
கத்தியிலோ அரிவாளிலோ
அனுப்பிவைக்கப்படுவீர்கள்
சொர்க்கவாசலுக்கு

அதுவரை வேடிக்கை
அனைவருக்கும் வாடிக்கை!

தேர்தல் அவசரம்

தேர்தல் அவசரம்!

ஆகவே
கடந்து விடுங்கள்
கழுத்தறுபடும் காட்சிகளை!
மறந்துவிடுங்கள்
மரண அலறல்களை!

இனி ஒலிப்பதெல்லாம்
அன்பான வாக்காள பெருமக்களே
தாய்மார்களே, 
சகோதர, சகோதரிகளே!

நான் முதல்வரானால் ...
நாங்கள் வெற்றிப்பெற்றால் ...
நீங்கள் வாக்களித்தால் ...

இவைதான்
இனி தாயக மந்திரம்!
ஓட்டு ஒலிப்பான்களுக்கிடையில்
நசுங்கியே போகட்டும் குரல்வளைகள் .

ஏனெனில் 
"தேர்தல் அவசரம் "!

ஞாயிறு, 13 மார்ச், 2016

சிறகைத்தேடி

வானம் தொலைத்த பறவையாகிறாய்!

நீ தனிமைக்கடலில்  மூழ்கிப்போகிறாய்

தொடர்பு நூலினை அறுத்தெறிந்து
தொலைவுக்கு அப்பால்
தொலைந்தும், தொலையாமலும் நீ

இக்கட்டுகள் இறுகக்கட்டிய இதயத்துடன் நீ

மிதப்பதா  ? கிடப்பதா? எனத்தெரியாமல் 
இந்த ஒற்றைச்சிறகு!

எங்கும் சுற்றி திசைத்திரும்பும்
குளிர்காற்றென

திரும்பிவா
வற்றாக்கடலென நிரப்பிவைத்திருக்கிறேன்
என் நேசமதனை..

நின்பயணம் கரைசேருமென
காத்திருக்கிறேன் 
எப்பொழுதும்
உன் வருகையைத்தேடி!

புதன், 9 மார்ச், 2016

சின்னசின்னதாய்...

வானம் பரந்ததாய் இருக்கலாம்
ஆனால் பறத்தலென்பது எனக்கானதாய் இருத்தலே
சிறகின் பெருமை.

ஆழியென
நிரம்பியிருக்கலாம் நீரும்
மிதத்தலோ, நீந்துதலோ எனக்கானதாய் இருத்தலே கால்களின் பெருமை

உலுப்பிவிடும் அளவுக்கு  காய்த்திருக்கலாம் கண்ணீர்துளிகள்   புன்னகையோ, அழுகையோ
எனது மொழியாக இருப்பதே இதழ்களின் பெருமை 

எப்போதேனும்
கேள்விகளோடும், கேலிகளோடும் கடக்கவும் கூடும் இப்பயணம்
வாழ்க்கை எனக்கானதாய் இருத்தலே பிறப்பின் பெருமை!

அதுவரை ......
எனது பதில்களுக்கும் கேள்விகளுக்கும் வாயாடி என்றே
பெயர்சூட்டி   அழைக்கும்
இந்த ஊமைச்சமூகம்!

பெயர்சூட்டுவதைவிட,
பெருமை சூட்டுங்கள்  அமைதியாகும்
பெருங்கடலின் பேரிரைச்சல் !

செவ்வாய், 8 மார்ச், 2016

எரிந்து வீழ்ந்த நட்சத்திரம்

எத்தனை சத்தமாக
ஓங்கி ஒலிக்கிறது
நெரிக்கப்பட்ட
உன்குரல்வளையின்
நொறுங்கல்கள்!

மவுனமாய் பேசியிருக்கிறாய்                             மரணத்தோடும் கூட!

விளக்குகளை கொண்டாடும்
விக்கிரகங்கள் மத்தியில்
விடிவெள்ளிகளை கண்டுரசித்திருக்கிறாய்!

எரித்தபின்னும் உன்மீது தூவப்படுகிறது
சாதியத்தின் சாம்பல்!

ஆய்வுசெய்ய திறமை
இல்லையாம்  உனக்கு
ஆச்சர்யாவின் அழுகிய வாதம்!

துரோகிகள் துரோணர்களாயிருக்கும்வரை ஏகலைவன்கள் வெற்றியென்பது தூக்குக்கயிறே!

இரங்கற்பா இயற்றுவதில்
இந்தியதேசம் வல்லரசுதான்
இன்னும் சிலநூறாண்டுகளுக்கும்

போய்வா வெமுலாவே....
ஒதுக்கீடுதான் உன்உயிர்குடித்தது. உதவித்தொகையேனும் உருப்படியாய் கிடைக்கச்செய்யுமா உயிர்குடித்த உயர்கல்விநிறுவனங்கள்?

வெள்ளி, 4 மார்ச், 2016

பயணியா

புயலாகவோ காற்றாகவோ
சட்டென கடந்துவிட
உன்னால் முடிகிறது
பயணங்களை காரணம்சொல்லி...

பிழைப்பைத்தேடி
பிரயாணிக்கும் உன்
காலடிகளுக்கு கேட்குமா?
இதயத்தின் பரிதவிப்பு நொடிகள்

உன் மூச்சுக்காற்றை முழுவதுமாக தழுவி முக்தியடைய தவமாய்
என் உயிர்குழலும் உதிரக்குழாய்களும்!

கடவுளை சந்திக்க
காத்திருக்கும் பக்தனாய்
காதலை சுமந்து காத்திருக்கிறேன்
உன் பயணப்பாதைகளெங்கும்

உன் பார்வையின் எடையில்
சிலநேரம் சிறகாய்,
பலநேரம் சருகாய் 
என்நேசம்!

எனினும் உன்னைச்சுமந்து
பறக்க எத்தனிக்கிறேன்
சாத்தியமாகிறது பறத்தலென்பது
இம்முடமான பறவைக்கும்!

திங்கள், 22 பிப்ரவரி, 2016

தூண்டில்

வார்த்தைகளால் வசீகரிக்கிறாய்
வலைவீசாமல் மாட்டிக்கொள்கிறேன்
துடிப்பதற்க்காகவே  
தூண்டில் இடுகிறாய்

தறியின் கரம்பிடித்த  நூலாய்
விலக மனமின்றி
உறவாடிக்கொண்டே இருக்கிறேன்
உயிரின் ஊடாக...... 

ஏகாந்த அலைகளை
எழுப்பிக்கொண்டே போகிறாய்
இசையென எண்ணி
இரைச்சல்களையும்
ரசித்துக்கொண்டிருக்கிறது மனம்

ஊசித்துளைக்காத
உயிரையும் துளைத்து 
நீ நுழைந்தாய்
ஒரு வ(லி)ழியும்   இல்லாமல்...!!

வீட்டுக்கு வந்த
விருந்தாளியைப்  பற்றிக்கொண்டு
விடாமல் அழும் குழந்தையாய்
உனைப்பற்றி
குழறிக் குழறி கெஞ்சுதடி
குரல்வளையும்
என் உயிர்வளியும்!!

என்னை விட்டு
எப்போது நீ  போகிறாயோ
அந்நொடியில்
உன்னோடே வந்துவிட
உயிர்
பயிற்சி   எடுக்குதடி
ஒவ்வொருமுறையும்
வெளிவந்து .......

கவிதாயினி நிலாபாரதி

திங்கள், 15 பிப்ரவரி, 2016

தனக்கென முயலுநர்

ஐந்தாண்டுகளாக எங்கள் குறைகள் அரசால் தீர்க்கப்படவில்லை
ஊதியமுரண்பாடுகளை களைய வற்புறுத்தி 20அம்ச கோரிக்கைகளுடன்
அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம்!  - செய்தி!

அரசு செய்தது சரியே!

பட்டினிகிடப்பவனின் வலியை உங்களுக்கும் பசி வந்தால் தான் உணர்வீர்களெனில்
உங்களை பசியோடு வைத்திருக்கலாம் தவறில்லை
அரசு இயந்திரசக்கரங்களே!

விளைந்தநெல்லுக்கு சரியான விலையில்லை!
பிழிந்த கரும்பின் சக்கையாக தூக்கியெறியப்பட்டிருக்கும் வறுமை எனும் எறும்புகளால் அரித்துதின்னப்படும் நாங்கள்!

காடுவிற்று ,கழனி விற்று கல்விக்கு கட்டியத்தொகைக்கு வழியின்றி கந்துவட்டிக்காரனிடம் அடமானமாய் எங்கள் தன்மானம்

படித்தவர்களுக்கு வருவாய்க்கு வழியின்றி வயிற்றை நிரப்பிக்கொள்ள ஏதோ ஒரு வேலையெனும் அடிமைத்தனம்!

எல்லாவற்றுக்கும் மேலாய் எங்களுயிரை குடிக்கும் டாஸ்மாக்,  மீத்தேன்,  வயலுக்கு வலைவிரித்து கெயிலும் இப்போதைக்கு இறுதியாய்!

இவற்றுக்கெல்லாம் வலிக்காத உறைக்காத உங்கள் சதையா ஊதியத்தின் உயர்வுக்காய் மட்டும் உரத்தசத்தமாய் அழுகிறது!

நான் பட்டினியில் அழுது சாகிறோம்
நீங்கள் உங்கள் பரம்பரைக்கு போதவில்லை என்று போராடுகிறீர்கள்

வயிறும் வயலும் உயிருக்கும் மிஞ்சியதாய் இந்த பூமியில்           ஒரு மயிரளவு கூட எஞ்சியது எதுவுமில்லை

உணருங்கள்  எம் கேளிரே!

நரைக்காத காதல்


என் உலகத்தின்
உருண்டையில் 
எந்ததிசையில் நீ நிற்கிறாய்!

எந்ததேடுதலிலும் தோற்றுப்போகிறேன் உன்னைமுழுமையாக கண்டடையமுடியாமல்

ஆழ்கடலில் முக்குளித்தும் தேடுகிறேன்
அலைபரப்பின் மேல்விழுந்து சிப்பிக்குள் உறையும்
மழைத்துளி நீ என அறியாமல்!

காகிதம் படித்தவன் மட்டுமல்ல
காதலையும் களங்கமற
படித்தவன் நீ!

அத்தனைசுகங்களையும்
அன்பால் தந்து அணைத்தவன் நீ

புறச்சூழல்களால் புறக்கணிக்கப்படுவதாய்  காரணிகள் பல சொல்லி
என் காயங்களுக்கு நீயே வாள்சுழற்றுகிறாய்!

சத்தமிடத்துணியாமல் சரணடைகிறேன்
சாகும் நிலையிலும் நரைக்காது உனக்கு  என்மீதான காதல்!

நம்பிக்கை நங்கூரமிடுகிறது     நகரும் இந்தநாட்கள்!

சனி, 6 பிப்ரவரி, 2016

நாம் தானே கொலைக்காரர்கள்?

இதை எழுதுவதற்கு
கொஞ்சம் அச்சம் தான்
கொலைகாரர்களாகிய நாமே எழுதும் குற்றப்பத்திரிகை
அல்லவா இது!

ஆம் !வெளியில் சுதந்திரமாய் சுற்றித்திரியும் சூன்யகாரர்கள் நாம்!
அரைகுறை வெளிச்சம் போதும் அமாவாசை பற்றியெல்லாம் பயம்கொள்ளாத பயங்கரவாதிகள் தான்

வெள்ளித்திரைக்கு தங்கம் பூட்டிமகிழ்விக்கும் பூம்பூம் மாடுகள் நாம்!

இருபத்து ஆண்டுகளில் எல்லாமே கிடைத்துவிட்டது கையேந்தாமல்
பிச்சையென பேரழிந்து இலவசம் எனும் புனைப்பெயரில்

இருப்பவர்களை பற்றி நினைப்பதுமில்லை இறந்தவர்களை மறப்பதுமில்லை இருநாட்கள் இரங்கற்பா
இயற்றும் வரைக்கும்

நாம்தான் கொன்றோம் நரம்பில்லாத நாக்குகளால்
நாணமில்லாத செய்கைகளால்
ஒவ்வொரு ஆண்டுக்கும் ஐவராய்

தன்வயிற்றுக்காய்  போராடும் மனிதர்களுக்கு மத்தியில்
ஈழ உயிர்களுக்கு மூச்செரிந்து மாண்டானே முத்துக்குமரன்

காதலுக்காய் வாழ்ந்தவன் சாதிமோதலுக்காய் சக்கரங்களில் துண்டானனே இளவரசன்
குலம்தழைக்க வைத்திருந்த குலமகன் கோகுலனை கொலைக்களத்துக்கு அனுப்பிய கள்ள தூதுவர்கள் நாம்தானே !

வித்யாவும் விஷ்ணுபிரியாவும்
புனிதாவையும்  கூட
மரணக்குழியில் தள்ளிவிட்ட மனிதர்கள் நாம்!

பெருவெள்ளத்தையே மறந்தவர்கள் பேரறிவாளனே உனக்கா குரல்கொடுக்கப்போகிறார்கள்

பாலிலிருந்து பாழும் எல்லாவற்றிலும் களவாணிகள் களம்கண்டுவிட்டார்கள்
இனம்கண்டும் பிணம் போல நாம்!    


அமெரிக்காவில் வெள்ளஅபாயத்தை சரியாக கையாளாத அமைச்சரை கைதுசெய்து பத்தாண்டுகள்
பத்திய தண்டனை வாங்கிக்கொடுத்ததைப்போல வாங்கிக்கொடுக்க நாமென்ன அமெரிக்கா அறிவாளிகளா என்ன?

இருபத்துநான்கு மணிநேரமும் மதுபானக்கடை திறந்தாலும்
பேசத்தெரியாத திக்கு வாய் மூடர்கள் நாம்?

ரோகித் முதல் மோனிசாவரை மென்றுதுப்ப பழகிவிட்ட படுபாவிகள் நாம்!

ஊழல் வழக்குகள் எல்லாம் ஊறுகாய் தான் உச்சமன்றத்திற்கு!
அவர்கள் கண்கொத்திபார்வைகளெல்லாம் காளைகளுக்கும்,கழனியில்நிற்கும்
கிழவனுக்கும் தான்!

இதோ  ராப்பிச்சைக்காரன் வேடம் தரிக்க தயாரிவிட்டார்கள் ராஜதந்திரிகள்
மண்குடிசையை நோக்கி மந்திரிகள்!
காலில் விழும் கயவர்களை கையெடுத்து கும்பிட்டு அனுப்பிவிட்டு நீங்கள்  புட்டிகளிலும்  அம்மணிகளில் பொருட்களிலும் புளகாங்கிதம் அடையுங்கள்!

நாம் முதுகெலும்பு அற்றவர்கள்
மூச்சுவிடும் கோழைகள்
வலுவில்லாத நமக்கு வாக்கு எனும் வாள்(ய்)சுழற்றல்கள் என்ன வீண்தானே?

வீசும் காற்றுபட்டங்களை வாங்கிக்கொண்டு வாழ்க்கையையே அடகு வைக்கும் நாம்தானே கொலைக்காரர்கள்!


ஆத்தா நாங்க ஃபெயிலாகிட்டோம்

ஐம்பது ஆண்டுகளாய்
ஐயங்கள் ஏதுமின்றி
எல்லோரும் எழுதுகிறோம்
தேர்தல் பரீட்சை

தலைவர்கள் மீது
மையல்கொண்டு மையைக்கொஞ்சம் இட்டுக்கொண்டோம்
நீலமை
ஏனோ  கருப்பாய்   மாறி
வெளுத்துப்போனது
எங்கள் தேசம்!

கேள்விகள் இல்லை ஆனால்
ஐயங்கள் ஆயிரமுண்டு
ஆள்வது ஐயனா  ? பொய்யனா ? என்பது மட்டும்
மண்டைக்குள் ஏறுவதில்லை !

சீட்டைமடித்து பெட்டிக்குள்
போட்டு புலம்பிவந்தகாலம் போய்
பொத்தான்களின் பெட்டிக்குள் போட்டுவருகிறோம்
பொன்முட்டைவாத்து எனும் பொல்லாத வாக்கை

பாலோடும் தேனோடும் என்றார்
பஞ்சம தேரோட விடாதார்
விதி வந்து வீதிவந்ததை தொட்டுவிட்டால்
வீடுகளையே கொளுத்திவிட்டு
குடிசைக்கு மாற்று என்பார் கொள்கையைப்போல!

எல்லாரும் படித்து விட்டோம்  குடிநாட்டுக்கு கேடு
நாங்க குடிக்காமவிட்டாமல்
அவங்களுக்கு ஏது
கொடநாடும் கொடையாக நாடும்!

எட்டாம்வகுப்புவரை
இலவச தேர்ச்சி
இரண்டு மூன்று ஆண்டுகள் இயந்திர பயிற்சி !

எல்லோர் வீட்டிலும்
இரண்டு பொறியாளர்கள்
இரண்டாம் தலைமுறை பட்டதாரிகள்
வள்ளலாய் கல்வி
வறுமையை நீக்க
வழிதெரியாமல்!

பழையகொள்கையுடனும்
புதியசால்வைகளுடனும்
வேட்டியைத்துறந்தவர்கள் வெட்கமின்றி வீதிவழிவருகிறார்கள்!

படித்தவர்கள் அனுமதித்தால்
பட்டியலிலும் இடமுண்டு
இறக்கும்வரை எழுதிவிடுவோம்
இறுதித்தேர்வு என்பதனை

பலருக்கு இது பணச்சுற்று
சிலருக்கு இது முதல்சுற்று
நம்பியோருக்கு இறுதிசுற்றிது 

வெற்றிப்பெற்றது உங்கள்
வேட்கை
முற்றுபெறுகிறது
எங்கள் வாழ்க்கை!

நெல்லுச்சோறு
நித்தம் தான் தின்பேன்னு
நெடுநாள் கனவு கண்ட ஆத்தா
உன் கரும்சாம்பலில்
கண்ணீரோடு சொல்லுகிறேன்
ஐம்பதாண்டு காலத்தேர்வில்

ஆத்தா நாங்க ஃபெயிலாயிட்டோம்!


புதன், 3 பிப்ரவரி, 2016

அது ஒரு கனாக்காலம்!

அன்றொரு நாள் ஆறுவயதில் அழுகையை துவங்கியது
இனிப்பு மிட்டாய்களுடன்
எனது கல்விப்பயணம்!

உடனிருப்பாய் ஒன்றுமில்லை என்விரல்பிடித்த தந்தையின் கையைத்தவிர!
பள்ளியென்ற பயமே
பதுங்கும் குட்டிப்பூனையானேன்.
என்னையும் உடல் முழுதும் ஒளித்துக்கொண்டு விழிகளால் மலங்க மலங்க விழித்தபடி தலைமையாசிரியர் அறைக்குள் அப்பாவுடன் நுழைகிறேன் .
புன்னகை மட்டுமே  பூச்சாய் கொண்ட
வெள்ளைஉடை தேவதை என்தலைகோதுகிறாள் .
கைகளால் என்விரல்பற்றுகையில் வியர்த்து சிலிர்த்த என்னுடம்பு இளைப்பாறுகிறது சற்று!

கைப்பிடித்து காதுதொட பணிக்கிறாள் எட்டியும்
எட்டாமலும் தொட்டுவிடுகிறேன்
அவளுக்கோ...
வானம்தொட்டுவிட்ட பரவசம்!
அன்றைக்கே அதிசய        வரமளிக்கிறாள்
வகுப்பறை உனக்குத்தான் சொந்தமெனும் ஒற்றைவரம் .

கூடவே ஒளிர்கிறது
என் அப்பாவின் கண்களிலும் ஒளிமிக்க எதிர்காலம் .

சில்வர் தட்டுகளில் ஒத்தகாசு மிட்டாய்களும் இதயவடிவ இனிப்பு மிட்டாய்களும் மட்டுமே தட்சணையாக கொடுக்கிறேன் தலைமையாசிரியை எனும் தேவதைக்கு .
ஒன்றிரண்டை எடுத்துக்கொண்டு என்னை அனுப்பிவைக்கிறாள் இன்னொருகூடத்திற்கு
நான் அப்போதுதான் உணர்கிறேன் தெய்வம் பள்ளிக்கூடங்களிலும் பவனிவருமென ..
ஆம் என் முதல் வகுப்பு ஆசிரியை பேர் அறியாமல் குண்டு டீச்சர் என்றேதான் அறியப்பட்டார்
அப்போது சாக்லேட் என்பதோ சாதி  என்பதோ நாங்கள் யாரும் அறியவில்லை .
என்வகுப்பில் இருந்த அத்தனை பேருக்கும்  மிட்டாய்களை பகிர்ந்தளிக்கிறேன்..
பதிலாக அவர்கள் புன்னகையினை பரிசளிக்கிறார்கள். மிட்டாய் தீர்ந்தபின்னும் ஏனோ தீராமல் கரையாமல் அப்படியே இனித்தபடி இன்னுமிருக்கிறது புன்னகைகள்!
அன்று மதியம் வரை அப்பா என்னோடு...
பிறகு கையசைத்துகிளம்புகிறார் அவர் மனமசைந்து  மெல்லவந்து     என் அருகில் அமர்ந்துகொள்கிறது 

அப்படியே கரும்பலகையில் "அ" எனும்  அழகிய கடவுள் வரைகிறார் என்பெயரறியா தேவதை
ஒவ்வொரு எழுத்தாய் எழுந்துவந்து  மின்மினியாய் மனதிலும் வந்து ஒட்டிக்கொள்கிறது .

பட்டாம்பூச்சிகளின் முதுகில் புத்தகக்கூடுகள் சுமக்கவில்லை
மஞ்சள்பைதான் எங்கள் இறக்கைகளாய் அங்குமிங்கும் அசைந்தாடிபடியே
தாளமிட தட்டுகளும் !

அன்றிலிருந்து  பதிமூன்று ஆண்டுகளாய் கல்வி எப்போதும் கசந்ததில்லை கணக்கு பாடம் ஒன்றைத்தவிர!

கட்டணம் கட்ட கங்கணம் கட்டியதில்லை
தண்டம் என்பது வகுப்பறையில் மட்டுமில்லை
வார்த்தைகளில் கூட இருந்ததில்லை .

வளர்த்தெடுக்க தாய்பட்ட கடமையை விட,
வார்த்தெடுத்த கும்பிடத்தகுந்த குயவர்கள் என் ஆசிரியர்களே !

படிப்பு, வாசிப்பு, சிந்தனை எல்லாம் என் ஆரம்ப, நடுநிலைப் பள்ளி  நன்றாகக்கொடுத்ததே நான் பெற்ற வரம்!

கூடவே சத்துணவுதான் எங்கள் படிப்புக்காலத்தின் மொத்த உணவு அரசுவிடுமுறைகாலத்திலும் அப்பள்ளியின் ஆயாக்களே எங்கள் மணிமேகலைகள் அண்டாக்களே எங்களின் அட்சயப்பாத்திரம்!
கீரைகளில் மசிந்து, காய்களில்  குழைந்து முட்டைகளில் உயிர்வளர்த்து ஆசிரியர்களோடு அறம் வளர்த்தவர்கள் அவர்களுமே!

இசை,  நடனம்,  நாடகம்,  விளையாட்டு அத்தனையும்  மின்மினிகளை விடிவெள்ளிகளாக்கி  விண்ணிலல்ல
மண்ணில் மக்காமல் மின்னவைத்தவர்களே
எங்கள் ஆசிரியர்கள்!

ஆனால் இன்று
அப்படியிருக்கிறதா வகுப்பறை?  ஆசிரியர்களிருக்கிறார்களா பள்ளிக்கூடங்களில்?
மணியடித்ததும் சோற்றுக்கு ஓடும் பஞ்சகால பிள்ளைகளை போலல்லவா ஓடுகிறீர்கள் பேரூந்துகளை பிடிப்பதற்கு!

உங்கள் பிள்ளைகள் எல்லாம் கான்வென்ட் பள்ளிகளின் கல்லாபெட்டிகளை நிறைப்பதற்காக எங்கள் வயிற்றிலல்லவா  வரிக்கோடிடுகிறீர்கள்?

ஒவ்வொரு ஆண்டும் ஒன்றுகூடுகிறீர்கள் ஊதியம்வேண்டுமென்று ...

வகுப்பறை கூட  வேண்டாம் விட்டுவிடுங்கள்
மரத்தடியில்கூட மாணவர்க்கு ஞானம் பிறக்கக்கூடும்.

கழிப்பறை பற்றிக்கவலைஉண்டா?
சிறுநீர் கழிக்கமுடியாமல் ஒற்றைவிரல்தூக்கி கேட்கவும் முடியாமல் ஆடையில் கறைபட்டுவிடுமென அஞ்சியபடியே வெட்கத்தில் விரும்பிய கல்வியை விட்டுவிட்டு விலகிப்போன என் தலைமுறைகளுக்கு  என்ன கொடுத்திருக்கிறீர்கள்? 
உங்கள் குரலையாவது ஒலித்திருக்கிறீர்களா? 

நீங்கள் சரியாகக்கற்பித்திருந்தால் SSA திட்டங்களுக்கு என்ன வேலையிருந்திருக்கப்போகிறது?

கருவறை தாண்டியும் வகுப்பறைகள் கல்லறைகளாக மாறுவதை, மாற்றுவதை
இனியேனும் களையெடுத்தாலென்ன?  கருவறுத்தாலென்ன?

ஆசிரியர்களே எங்களுக்கு வினாக்களுக்கு பதில்கூறுங்கள்?
இல்லையேல் வகுப்பறைக்கு வாருங்கள்..
நாங்கள் நடத்துகிறோம் வாழ்க்கைபாடம் எதுவென!

திங்கள், 25 ஜனவரி, 2016

ஜொலித்த வீதி

சிலநாட்களை சிந்தைகளில் மறக்கமுடியாது  அப்படித்தான் நேற்றையபொழுதும்,

வீடுகளுக்கு பெயருண்டு. வீதிகளுக்கும் பெயருண்டு.
வீதியே பெயராய் ஆனது வியப்புதான்! 

புதுகையின் பூரிப்பும், பெருமையும் வீதியைப்பொறுத்தே என்றால் அதுமிகையில்லை.

இப்போதும் அப்படிதான்
வீதியை உருவாக்கி விரிவாக்கம் செய்யும் வித்தகக்கலையை விதவிதமாய் செய்யும்  கவிஞர்கள் அமைப்பாளர்கள் திரு. கீதா  வைகறை  இவர்களோடு துணைநிற்கும் இமயங்களை நான் என்னவென்று சொல்வேன்? 

முதல்முறை நான் வீதிகளத்திற்கு வந்தது கடந்தமாதம் தான் .
புத்தாண்டின் பரிசாய் புதுக்கவிதை வாசித்து மகிழும் வாய்ப்பை தந்தது வீதிக்களம் .

வலைப்பதிவர் மாநாட்டில் கண்டைந்தேன் பல நல்ல மனிதர்களில் நட்புகளை...

அப்பப்பா அசந்துபோனேன் பல புதிய மனிதர்களை புதுகை புதையலாகக்கொடுத்தது என்னவோ நான் செய்த தவம்தான்!

மதுரைக்குச்சென்றிருந்தேன் சொந்தப்பணியாக இம்மாதக்கூட்டத்தில் நானும்  கூடடைவேனா என்ற அச்சம்வேறு...
என்றாலும் ஒரு நம்பிக்கையில் மூன்றுமணிநேரம் பயணித்து  வந்துசேர்ந்தேன் சங்கத்தமிழ்வளர்த்த மதுரையிலிருந்து பொங்குதமிழ் வளர்க்கும் புதுகைக்கு!

பூ மலர்வது போல அவ்வளவு மகிழ்வு தேவதா எனும் தேவதையின் முகத்தில்
சிறப்புத்தரிசனமாய் சிறப்பு அழைப்பாளர் திரு வெங்கட் நாகராஜ் அவர்களின் அறிமுகம் பெருமகிழ்ச்சி கொண்டது மனம்!

மேகத்துளிகள் ஒன்று சேர்ந்து மழையாவதுபோல 
கடலானது களம்!
கவிஞர்கள் வருகையால் ....

தொடங்கியது ...
படித்ததில் பிடித்ததை
பகிர்ந்தது பிடித்தது பகிர்ந்தவர்களையும் சேர்த்தும் பிடித்தது .

வரவேற்புரையை திரு. கீதா  அவர்கள் துவங்க அப்புறம் ஆரம்பித்தது பாருங்க அடைமழை!

ஓவியாவின்  
"உதிரத்தை உலுக்கச்செய்த வெண்மணிக்கொடுமைப்பற்றியப்பாடல்
சோலச்சியின் "மானமுள்ள தமிழினமே " என இழந்த ஒன்றின் இருப்பை தெரிவிக்கும் பாடல்!

கூடவே முன்னத்திஏராய் விளங்கும் முத்து நிலவன் அய்யாவின் கருத்துக்களும் சுவைசேர்த்தது .

கவிதைக்களம் புகுந்தேன் நானும்!  கொஞ்சம் பதற்றத்துடனும் நிறைய நம்பிக்கையுடனும்!

சமூகத்தின் அவலங்களை தோலுரிக்க சாட்டையை சுழற்றுவதென முடிவுசெய்து தான்

"வீணாபோன வேட்டி,  சடுகுடு " எனும் கனல்கக்கும் கவிதைகளை தேர்ந்தெடுத்து வாசித்த நான் கொஞ்சம் அல்ல
நிறைய வேகமாகவே வீசிவிட்டேன் சாட்டைகளை!

சட்டென்று மின்னி சடுதியில் மறைந்த மின்னலாய் பலரின் மனம் தொட்டுப்போனதை பிறகுதிர்த்த கருத்துக்களில் கண்டுகொண்டேன் .

இன்னும் பொங்கலுக்கு சர்க்கரையாய்,
பாலுக்கு  தித்திப்புகூட்டும் தேனாய்,  தேடும் திரவியமாய்
நண்பர் செல்வா மற்றும் மாணவக்கவிஞரின் கவிதைகளும்  களம் கண்டது.

அத்தனைப்பேரின் பாராட்டே எனக்கு  அரசவையில் பொற்கிழிபெற்றதொரு பூரிப்பு! 

அப்படியே சிலாகிக்க சிறுகதை,
துரைக்குமரனின்
உப்புவேலியின் ஓர்அறிமுகம்

"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்ற வள்ளுவனின் வாக்கை நாக்கால் மட்டுமல்ல மனதால் எண்ணிக்கொண்டால் வெற்றிஎன்பது  விண்ணளவு தூரமில்லை என்பதை தனதனுபவத்தால் பதியவைத்த பண்பாளரின் பதிவுகள் .

ஆசிரியராய் இருந்தாலும் கற்பிப்பது  மட்டுமல்லாது     வாசிப்பை பிறருக்கு ஒப்பித்தலும் ஒரு பயனே என ஹார்டியை பற்றிய பலதகவல் பகிர்ந்து வியக்கவைத்தார் நண்பரும் சகோதரருமான திரு.கஸ்தூரி அவர்கள் .

ஒருநாள் பார்வைக்கு பிறகு இவ்வளவு நேசம் சாத்தியமா?  எனத்திகைத்திருந்த வேளையில் என்னை நட்பில் திளைக்கசெய்த மைதிலியை எண்ணி மீமகிழ்ச்சியடைந்தேன் கூடவே அவரது பாராட்டுகளும்!

இடையில் இதமாக அளிக்கப்படட நவதானிய சுண்டல் சூப் என்று இன்னும் நிகழ்ச்சியை சொர்க்கமாக்கிப்போனது .

சிறப்புவிருந்தினர் சிரிப்பால், சிந்தனையால் வசீகரித்த வலைப்பதிவர் திரு.வெங்கட் அவர்கள் செலவில்லாமல் எல்லோரையும் சுற்றிப்பார்க்கவைத்துவிட்டார் தன்  பயணஅனுபவங்களால்   
எங்கள எல்லோரையும் வார்த்தைகளால் விரல்பிடித்தபடி!

அவர் கூறிய அத்தனையிலும் என்னைக்கவர்ந்தவை இவை
தீப்பற்றி எரிகையிலும் இயற்கையை சபிக்காமல் ரசித்துபழகிய மக்கள்!

"யாரோருவர் வரக்கூடும்  தன்னைத்தேடி தேநீர் பருகுதல் மூலமாக  வெம்மையைஏற்றிக்கொள்ள தன் நம்பிக்கைக்காவேனும் அதிகாலை  தீமூட்டும் தேநீர்கடைக்காரர் எனக்கு  காட்சியற்ற கடவுளாகவே தெரிந்தார் "
"பார்வையில் ஆயிரம் கதைசொல்லுவார் 
படித்தவர்தான் அதை பதிந்தும்விட்டார் என்பதைப்போல காணும் காட்சிகளால் கவிதையோ கட்டுரையோ ஏதோ ஒன்றை எழுதவும் சொல்லிக்கொடுத்தார் .

நிறைவு செய்வதற்கு முன் நெஞ்சங்களை மட்டுமல்ல வயிற்றையும் நிறைக்கச்செய்தவர் திருமிகு நீலா அம்மா! 

தலைமைக்கும் தகைமைக்கும் பூக்களோடு புன்னகையை பூச்செண்டோடு பரிசளித்தார்கள்  செல்வா அவர்களும் புதுகையின் புத்தாண்டு வாழ்த்தாக!

வரகரிசி பாயாசம் வாழைப்பூ வடையென வழங்கி மனம் நிறைத்தார்கள்  திருமிகு. நீலா அம்மாவோடு    திரு.வைகறையும்

பூக்களெல்லாம் ஒன்று கூடி புகைப்படகருவியின் கண்ணாடிபார்த்து சிரித்துக்கொண்டோம்  புதுகைசெல்வாவின் பேரன்பு பெருமுயற்சியால்!

வீதி களம் விரிவாக்குவோம் வியக்கட்டும்!
அந்த விண்ணுலகும் இந்த விஞ்ஞான உலகத்தோடு சேர்ந்தே!