சனி, 23 ஜனவரி, 2016

சடுகுடு

தீபகற்ப நாடு மட்டுமல்ல
உலகமே உற்றுப்பார்க்கும்
திருவிழாக்களின் நாடும்கூட

ஐந்தாண்டுக்கு ஒருமுறையும்
அவ்வப்போது பலமுறையும்
தடையின்றி நடக்கும் தேர்தல் திருவிழா!

வெள்ளுடை தரித்த வீதியுலாநாயகர்கள் ஊர்வலம்
தடையில்லா     தரிசனம்
கரைபுரளும் கருணைமழை!

மந்திரமாலையாய்
மக்கள் மயங்கும் வாக்குறுதிகள்
வாக்குகளால் வாய்க்கரசி போடும்  ஓட்டுத்திருவிழா

உங்களுக்காகவே நான்!  ஒற்றைவார்த்தையில் ஊரையே விழுங்கிய விசித்திரகடவுள்கள்

இரவல் இழிவென்று வாழ்ந்தவனை இலவசத்திற்கு வசப்படுத்துவதே வாடிக்கையான சாதனை

பாலுக்கும் காவல்
பூனைக்கும் தோழனாய்
புது வேடம் கட்டிக்கொண்டு ஆடுகிறார்கள்

விளைவித்தவனுக்கு
விலையிலா அரிசி
சளைத்தவனுக்கு சகலமும் பிச்சை சாமான்யனுக்கு சாராயக்கடை
இது
அரசின் கல்லாக்கடையும்கூட!

பிணைக்கப்பட்ட சங்கலிகளில் மாக்களாகிப்போன மக்களின் பிரதிநிதிகள்

காணாமல் போன கண்மாய்களை கண்டுபிடிக்க மழை வருவித்த மந்திரக்கடவுள்கள்

 
மேசைதட்டியே தவறுகளை தட்டிக்கொடுத்து பழகிய தறுதலைமன்னர்கள்!

சாதியால் கொலைசெய்யும் கொள்ளிநெஞ்சுக் கள்வர்கள்
சலனமே இல்லாமல் 
சகலத்தையும் முடிக்கிறார்கள்

மண்ணைக்கயிராய்
திரிப்பவர்களும்
விண்ணைவில்லாய்
வளைப்பவர்களும் வலம்வருவார்கள்
விஐபிவிலாசங்களுடன்!

போர்க்காலமீட்பு பொற்கால ஆட்சி
டாஸ்மாக்தமிழ்நாட்டின்அக்மார்க்..

களமாட அழைக்கிறார்கள்
கவனம்
வெற்றியென்பது விரல்மையில்!

1 கருத்து: