சனி, 6 பிப்ரவரி, 2016

ஆத்தா நாங்க ஃபெயிலாகிட்டோம்

ஐம்பது ஆண்டுகளாய்
ஐயங்கள் ஏதுமின்றி
எல்லோரும் எழுதுகிறோம்
தேர்தல் பரீட்சை

தலைவர்கள் மீது
மையல்கொண்டு மையைக்கொஞ்சம் இட்டுக்கொண்டோம்
நீலமை
ஏனோ  கருப்பாய்   மாறி
வெளுத்துப்போனது
எங்கள் தேசம்!

கேள்விகள் இல்லை ஆனால்
ஐயங்கள் ஆயிரமுண்டு
ஆள்வது ஐயனா  ? பொய்யனா ? என்பது மட்டும்
மண்டைக்குள் ஏறுவதில்லை !

சீட்டைமடித்து பெட்டிக்குள்
போட்டு புலம்பிவந்தகாலம் போய்
பொத்தான்களின் பெட்டிக்குள் போட்டுவருகிறோம்
பொன்முட்டைவாத்து எனும் பொல்லாத வாக்கை

பாலோடும் தேனோடும் என்றார்
பஞ்சம தேரோட விடாதார்
விதி வந்து வீதிவந்ததை தொட்டுவிட்டால்
வீடுகளையே கொளுத்திவிட்டு
குடிசைக்கு மாற்று என்பார் கொள்கையைப்போல!

எல்லாரும் படித்து விட்டோம்  குடிநாட்டுக்கு கேடு
நாங்க குடிக்காமவிட்டாமல்
அவங்களுக்கு ஏது
கொடநாடும் கொடையாக நாடும்!

எட்டாம்வகுப்புவரை
இலவச தேர்ச்சி
இரண்டு மூன்று ஆண்டுகள் இயந்திர பயிற்சி !

எல்லோர் வீட்டிலும்
இரண்டு பொறியாளர்கள்
இரண்டாம் தலைமுறை பட்டதாரிகள்
வள்ளலாய் கல்வி
வறுமையை நீக்க
வழிதெரியாமல்!

பழையகொள்கையுடனும்
புதியசால்வைகளுடனும்
வேட்டியைத்துறந்தவர்கள் வெட்கமின்றி வீதிவழிவருகிறார்கள்!

படித்தவர்கள் அனுமதித்தால்
பட்டியலிலும் இடமுண்டு
இறக்கும்வரை எழுதிவிடுவோம்
இறுதித்தேர்வு என்பதனை

பலருக்கு இது பணச்சுற்று
சிலருக்கு இது முதல்சுற்று
நம்பியோருக்கு இறுதிசுற்றிது 

வெற்றிப்பெற்றது உங்கள்
வேட்கை
முற்றுபெறுகிறது
எங்கள் வாழ்க்கை!

நெல்லுச்சோறு
நித்தம் தான் தின்பேன்னு
நெடுநாள் கனவு கண்ட ஆத்தா
உன் கரும்சாம்பலில்
கண்ணீரோடு சொல்லுகிறேன்
ஐம்பதாண்டு காலத்தேர்வில்

ஆத்தா நாங்க ஃபெயிலாயிட்டோம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக