இதை எழுதுவதற்கு
கொஞ்சம் அச்சம் தான்
கொலைகாரர்களாகிய நாமே எழுதும் குற்றப்பத்திரிகை
அல்லவா இது!
ஆம் !வெளியில் சுதந்திரமாய் சுற்றித்திரியும் சூன்யகாரர்கள் நாம்!
அரைகுறை வெளிச்சம் போதும் அமாவாசை பற்றியெல்லாம் பயம்கொள்ளாத பயங்கரவாதிகள் தான்
வெள்ளித்திரைக்கு தங்கம் பூட்டிமகிழ்விக்கும் பூம்பூம் மாடுகள் நாம்!
இருபத்து ஆண்டுகளில் எல்லாமே கிடைத்துவிட்டது கையேந்தாமல்
பிச்சையென பேரழிந்து இலவசம் எனும் புனைப்பெயரில்
இருப்பவர்களை பற்றி நினைப்பதுமில்லை இறந்தவர்களை மறப்பதுமில்லை இருநாட்கள் இரங்கற்பா
இயற்றும் வரைக்கும்
நாம்தான் கொன்றோம் நரம்பில்லாத நாக்குகளால்
நாணமில்லாத செய்கைகளால்
ஒவ்வொரு ஆண்டுக்கும் ஐவராய்
தன்வயிற்றுக்காய் போராடும் மனிதர்களுக்கு மத்தியில்
ஈழ உயிர்களுக்கு மூச்செரிந்து மாண்டானே முத்துக்குமரன்
காதலுக்காய் வாழ்ந்தவன் சாதிமோதலுக்காய் சக்கரங்களில் துண்டானனே இளவரசன்
குலம்தழைக்க வைத்திருந்த குலமகன் கோகுலனை கொலைக்களத்துக்கு அனுப்பிய கள்ள தூதுவர்கள் நாம்தானே !
வித்யாவும் விஷ்ணுபிரியாவும்
புனிதாவையும் கூட
மரணக்குழியில் தள்ளிவிட்ட மனிதர்கள் நாம்!
பெருவெள்ளத்தையே மறந்தவர்கள் பேரறிவாளனே உனக்கா குரல்கொடுக்கப்போகிறார்கள்
பாலிலிருந்து பாழும் எல்லாவற்றிலும் களவாணிகள் களம்கண்டுவிட்டார்கள்
இனம்கண்டும் பிணம் போல நாம்!
அமெரிக்காவில் வெள்ளஅபாயத்தை சரியாக கையாளாத அமைச்சரை கைதுசெய்து பத்தாண்டுகள்
பத்திய தண்டனை வாங்கிக்கொடுத்ததைப்போல வாங்கிக்கொடுக்க நாமென்ன அமெரிக்கா அறிவாளிகளா என்ன?
இருபத்துநான்கு மணிநேரமும் மதுபானக்கடை திறந்தாலும்
பேசத்தெரியாத திக்கு வாய் மூடர்கள் நாம்?
ரோகித் முதல் மோனிசாவரை மென்றுதுப்ப பழகிவிட்ட படுபாவிகள் நாம்!
ஊழல் வழக்குகள் எல்லாம் ஊறுகாய் தான் உச்சமன்றத்திற்கு!
அவர்கள் கண்கொத்திபார்வைகளெல்லாம் காளைகளுக்கும்,கழனியில்நிற்கும்
கிழவனுக்கும் தான்!
இதோ ராப்பிச்சைக்காரன் வேடம் தரிக்க தயாரிவிட்டார்கள் ராஜதந்திரிகள்
மண்குடிசையை நோக்கி மந்திரிகள்!
காலில் விழும் கயவர்களை கையெடுத்து கும்பிட்டு அனுப்பிவிட்டு நீங்கள் புட்டிகளிலும் அம்மணிகளில் பொருட்களிலும் புளகாங்கிதம் அடையுங்கள்!
நாம் முதுகெலும்பு அற்றவர்கள்
மூச்சுவிடும் கோழைகள்
வலுவில்லாத நமக்கு வாக்கு எனும் வாள்(ய்)சுழற்றல்கள் என்ன வீண்தானே?
வீசும் காற்றுபட்டங்களை வாங்கிக்கொண்டு வாழ்க்கையையே அடகு வைக்கும் நாம்தானே கொலைக்காரர்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக